Sunday, March 20, 2011

ரண்டடக்கா

ஒத்தையடி பாதையில் போயிருக்கிறீர்களா? இப்பொழுதெல்லாம் வீட்டில் இருந்து இந்த ஒத்தையடிப்பாதையில் தான் பேருந்து நிலையத்துக்கு வர வேண்டும். மழை அதிகம் பெய்யும் இடம் கெர்லிங்கன் , இரண்டு பக்கமும் முட்கள் நிரம்பியிருக்கும் ஆனால் வெகு சீக்கிரமாக என்னை கொண்டு சேர்த்துவிடும். 92 க்கு காத்திருந்தேன்.


ஹாஃப்ட்பான்ஹாஃப் என்றால் முக்கிய ரயில் நிலையமாம் யாரோ சொன்னார்கள். அதிலிருந்து நேராக கோனிங்ஸ்ட்ராசே வந்து சேர்ந்தேன் ,பக்கம் தான் நம்மூர் கடைத்தெரு மாதிரி இருக்கும். மணி எட்டிருக்குமா? இருக்கலாம். கடைத்தெருவின் ஓரங்களில் பல்வேறு கலைஞர்கள் எதேனும் கருவியை வைத்து வாசித்துக்கொண்டிருப்பார்கள். ஒருவர் கிளியை தலையில் வைத்துக்கொண்டே சாக்ஸ்போன் வாசிப்பார் ,நாம் காசு போட்டோம் என்றால் கிளி கீக் என்று கத்தும். கண் தெரியாத இருவர் ஒரு பியானிஸ்ட்டுடன் வயலின் வாசிப்பார்கள் , சில மெக்சிக்க பாடகர்கள் பாடுவார்கள், அப்பறம் பெரிய வயலின் வைத்து ஒருவர் வாசிப்பார். அது அவர் உயரத்துக்கு இருக்கும்.

கோனிங்க்ஸ்ட்ராசேவில் இரண்டாவது இடதில் இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கினேன். கப் கேக்குகளுக்கென்று பரத்தியேகமாக ஒரு கடையுண்டு. அதன் வாசலில் எப்பொழுதும் ஒரு நாய் குட்டி இருக்கும் அதுக்கு நானும் எனக்கதுவும் சில நாட்களாக பரிச்சயம் ,கடந்து சென்றேன். செங்குத்தாக வரும் படிகளில் இறங்கினேன். அந்த சின்னத்தெருவை நான் வந்தடைந்த போது மணி 9 இருக்குமா? கம்மியாகத்தான் இருக்கும். அவன் அங்கு தான் அக்கார்டியோன் வாசித்துக்கொண்டிருப்பான் ,அங்கு ஆள் நடமாட்டமே இருக்காது. தினமும்ப்போல் இன்றும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றேன். பத்து மணிக்கு மேல் பக்கத்து சந்தில் இருக்கும் ஒரு க்ளப்புக்கு போய் விடுவான் முந்தா நாள் எட்டிப்பார்த்ததில் அங்கே காமக்களியாட்டங்கள் நடக்கும் என்று தெரிந்து கொண்டேன். கண்ணை மூடி அக்கார்டியானை அதன் பைக்குள் சொறுகினான் ,எழுந்து நின்று ஆட ஆரம்பித்தான் எதேதோ அர்த்தமற்ற வார்த்தைகளில் பாட ஆரம்பித்தான் ,நானும் உடன் சேர்ந்து கொண்டேன் அவன் சொல்லும் வார்த்தைகளையே சொல்லிப்பாடினேன். பக்கத்தில் உள்ள பையிலிருந்து எனக்கதை கொடுத்தான். சில்லறைகளை பொறுக்கிக்கொண்டு கிளப்பை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.

நான் அதை தடவிப்பார்த்தேன் ,குடுகுடுப்பை என்று சொல்லலாமா? இல்லை. இது வேறு சின்ன வயதில் இதே போல் ஒன்று பார்த்திருக்கிறேன் கைப்பிடி மாதிரி ஒரு குச்சு இருக்கும் அதன் மேல் குடுகுடுப்பைப்போல் உருண்டையாக ஒன்று.இரண்டு பக்கமும் நூலால் சின்ன ப்ளாஸ்டிக் பந்தை கட்டி விட்டிருப்பார்கள். கையை குவித்து அதை நடுவில் வைத்து உருட்ட ஆரம்பித்தேன் ரண்டட்டக்கா ரண்டட்டகா ரண்டட்டகா என்று சத்தம் போட்டது சிரிப்பாக வந்தது நிறுத்தவே முடியவில்லை. சுவற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தேன் ஹஹஹ்ஹா ரண்டடக்கா ரண்டடக்கா.

பேருந்து நிலையம் வரைக்கும் அதை வாசித்துக்கொண்டே போனேன். காலை முன்னே எத்தி எத்தி அதை வாசித்துக்கொண்டே ஹேய் ரண்டடக்கா ரண்டடக்கா ரண்டட்க்கா

அடுத்த காலை எத்தும்போதும் அதே ஹேய் ரண்டட்டக்கா ரண்டட்டக்கா ரண்டட்க்கா. பேருந்தில் யாரும் பார்த்துவிடக்கூடாதென்று கோட்டுக்குள் ஒளித்து வைத்தேன். ஒத்தையடி பாதியில் வீடு வந்தேன் ,வாசல் விளக்கு வேலை செய்யவில்லை. கதவை திறந்த நிமிடத்தில் படார் என்று மூடினேன் ,ஹே ரண்டடக்கா ரண்டடக்கா ரண்டடக்கா. கொஞ்ச நேரத்தில் சோர்வடைந்து விட்டேன்
92 இல் இருந்து இறங்கினேன். உள்ளே போக எனது அடையாள அட்டையை காட்ட வேண்டும் ,பெருநிறுவனம் அது. சில நாட்கள் முன்பு வந்து சேர்ந்த பொழுது அன்னாந்து பார்த்த கட்டிடங்களை இப்பொழுது பார்ப்பதில்லை. நீலத்திமிங்கலத்தின் வாய்க்குள் போவது போன்ற உணர்வை அந்த ஆட்டோமேட்டிக் கதவுகள் ஏனோ தருகின்றன. என் அறைக்கு போகும் முன்பு நான் வந்தேன் என்று ஒரு மெஷினிடம் சொல்ல வேண்டும்.8.34 க்கு வந்திருக்காய் என்றது. என் கணிணியில் இன்று செய்ய வேண்டியவற்றின் அட்டவனையைப்பார்த்தேன் , அது இருந்தது.

வெள்ளை கோட்டை மாட்டிக்கொண்டேன் ,எனது கைகள் அளவுக்கு நீல நிற க்ளவுசை தேடியெடுத்துப்போட்டேன். அந்தப்பொடியை அளவெடுத்தேன் , அதை ஓங்கி அழுத்தி மாத்திரையாக்கும் வேலை , மெஷின் செய்யும். இங்கே அங்கே கொட்டி தொலைத்தது பொடி , கடிந்து கொண்டேன். பொடியை ஒரு சின்ன அளவிலான பாத்திரத்தில் போட்டேன். பாத்திரம் என்றால் பால் பாத்திரம் மாதிரியில்லை மேலும் கீழும் கொஞம் குண்டான ஸ்டீல் கம்பிகளால் மூட வேண்டும் ஆனால் கம்பிகளால் நிற்காது ,அதனால் அதை தாங்கிக்கொள்ள ஒரு நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும்.நாற்காலியோடு கொண்டுபோய் அந்த அழுத்தும் இயந்தரத்தில் வைத்தேன். மேலிருந்து ஒரு பெரிய உருண்டை இரும்பு இதை அழுத்தும் , அதை ஏற்றி இறக்க கால் பக்கத்தில் பெடல் இருக்கும். ஒரு அழுத்து அழுத்தியாகிவிடின் அது அப்படியே நின்று கொள்ளும் , நாற்காலி தேவையில்லை பிறகு மெஷினாக அதை அழுத்த நாம் சில கட்டளைகள் கொடுத்தால் போதும்.

முடிந்தவுடன் எடுத்து பார்த்த பொழுது மாத்திரை உடைந்தார்ப்போல் வந்திருந்தது , பொடியைத்த்யாரிக்க எவ்வளவு நாட்கள் ஆயிற்று தெரியுமா என்று கத்தினேன் ,வாயைத்திற்க்காமல் என்னை பார்த்துக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்து ஒருவன் வந்து பார்த்து சிரித்துவிட்டு போனான். நானும் பதிலுக்கு அவனை பார்த்து சிரித்தேன். அடுத்த முறை செய்த பொழுது வடிவாக மாத்திரையை கொடுத்திருந்தது ,வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தேன் மூஞ்சியை திருப்பிக்கொள்வது போல் நாற்காலியிலிருந்து சரிந்தது.

ஏழாவது மாத்திரைக்கு பிறகு ஸ்டீல் கம்பியை தனியாக பிரித்தெடுக்க முடியவில்லை ,ஏன் என்றேன் மீண்டும் வரமாட்டேன் என்றது. தண்ணீர் ஊற்றிக்கழுவினேன் உள்ளே சிராய்ப்புகள் இருந்தது. சின்ன பேப்பரை நன்றாக சுருட்டி அதன் உள் அழுக்கை நீக்கினேன் ,தண்ணீர் ஊற்றி மீண்டும் கழுவியபொழுது முழுச்சாப்பாடு சாப்பிட்ட திருப்தியில் இருப்பவனைப்போல் காட்சிகொடுத்தது. என்னை சாப்பிட அழைத்துச்சென்றார்கள்.
சாப்பிட்ட பிறகு ஒரு நடை நடப்பது அங்கே வழக்கம். முன்னே போகும் பெண்ணுக்கு மிக நீளமான தலைமுடி என்றான் பெர்ண்ட். அவள் இந்தியப்பெண் என்றான் ஃப்ரான்க். எப்படித்தெரியும் இது பெர்ண்ட். அவள் பெண்ணாயிற்றே , இந்த பில்டிங்கில் இருக்கும் அனைத்து இளம்பெண்களையும் தெரிந்து வைத்திருக்கிறேன் என்றான். பொதுவாக இந்தியப்பெண்கள் இப்படி முடி வைத்திருப்பார்களா என்று கேட்டான் ,தெரியாது என்றேன். உனக்கு என்ன எழவுதான் தெரியுமோ என்று முனுமுனுத்தான். நான் அவர்களை விட்டு வேகமாக நடந்திருக்கிறேன் என்பதை வேலையிடத்துக்கு வந்ததும் உணர்ந்து கொண்டேன். பாத்திரம் காய்ந்து விட்டிருந்தது. அதை மீண்டும் இன்று அழுத்த மணமில்லை.

அவன் அங்கே தான் இன்றும் உட்கார்ந்திருந்தான் ,வழக்கம் போல் ஆள் அரவமில்லை. இன்று கூடதல் குதூகலத்துடன் எனது ரண்டட்டக்காவை எடுத்து வாசித்து காமித்தேன் அவன் குதிக்க ஆரம்பித்தேன் ,சிறிது நேரம் ஆடிவிட்டு நகர்ந்துவிட்டான் ,அவன் பின்னே சென்றேன். வராதே என்று கத்தினான் ,நான் அதை ஆட்டிக்கொண்டே அவனை அடைந்தேன்.க்ளப் வந்துவிட்டது. அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டே அதை வாசித்துக்கொண்டிருந்தேன். நான் காலைஆட்டுகையில் என் கையிலிருந்து அதைப்பிடுங்கி அதன் மேலேறி குதிக்க ஆரம்பித்தான் எனக்கு வந்த கோபத்தில் அவனை கீழே தள்ளி விட்டேன். அதை மங்கலான வெளிச்சத்தில் பார்த்தேன் ,முழுவதுமாக சப்பளிந்திருந்தது நூல்கள் அறுபட்டு போயிருந்தன. அழுகையை அடக்கிக்கொண்டு தேவுடியாப்பைய்யா என்று தமிழில் திட்டினேன் ,அவனுடன் இப்பொழுது இன்னும் சிலர் இருந்தார்கள் ஒருவன் என் கையை ஓங்கி மிதித்தான் , நான் மிச்சமிருந்ததை பொறுக்கிக்கொண்டு வலப்பக்கம் இருக்கும் குறுக்குச்சந்தில் ஓடி வந்துவிட்டேன்.பின்னால் யாரும் வரவில்லை.
இன்றும் வாசல் விளக்கு வேலை செய்யவில்லை ,கதவைப்பூட்டாமல் எனது மெத்தைக்கு வந்தேன் கொஞ்ச நேரம் விசும்பியிருப்பேன் போல ,பிறகு தூங்கிவிட்டேன்.

காலை 8.43 க்கு வந்திருக்கிறாய் என்றது மெஷின் ,நன்றி சொல்லாமல் நடந்தேன். அட்டவனை மாறவில்லை , 50 மாத்திரைகள் தயாரிக்க வேண்டுமே! மீண்டும் பாத்திரத்தை வெளியில் எடுத்தேன். இனிமேல் அவனை பார்க்கப்போவதில்லை என்றேன் ,சரி என்பது போல் பதில் சொல்லியது. நேற்றே வேலையை முடித்திருக்கலாமே என்று ஒரு குரல் ,எனது மேற்பார்வையாளருடையது. முடித்திருக்கலாம் தான் ஆனால் 10க்கு மேல் தொடர்ந்து இதை அழுத்தினால் இதற்க்கு காயங்கள் ஏற்படுகின்றன சிறிது ஓய்வுத்தேவை என்றேன். உனக்கா என்றார் ,இல்லை சொன்னேனே இதற்க்குத்தான் ஓய்வு. அதற்க்கென்ன உயிரா இருக்கிறது என்று சிரித்துக்கொண்டே கேட்டார். எனக்கு அவர் கேட்ட கேள்வி புரியவில்லை.