Friday, February 12, 2010

விண்வெளி வீரரின் அசகாய சாகசங்கள்


இது முழுக்க முழுக்க கற்பனை பதிவு.இப்பதிவில் இருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் கற்பனையே.தப்பி தவறி நீங்கள் சம்பந்தம்படுத்தி கொண்டால் நான் அதற்க்கு பொறுப்பில்லை.

விண்வெளி வீரர் என்ற பெயர் இவருக்கு வர என்ன காரணம் என்பதை நானறியேன். விவரம் அறிந்தவர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன்.

விண்வெளி ஒரு பிரபல ஆராய்ச்சி கூடத்தின் மிகப்பெரிய விஞ்ஞானி.இவரை ஞான குருவாக ஏற்று கொண்டு கோடிக்கணக்கான மாணவர்கள் உலகெங்கும் இருக்கின்றனர் .

வகுப்பறையில் அவர் பாடம் நடத்த அனைவரும் நித்திரை கொள்ளும் வேளையில் திடுமென எல்லாரையும் ஒற்றை சொல்லாடலில் எழுப்பினார்.

எதோ ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார், ஒரு கப்பல் கட்டுமான நிறுவனம் தனது செய்கைகளில் உள்ள குளறுபடியால் Shipping turn over ஐ இழந்துவிட்டது என்றார். சரி தான் என்று மீண்டும் நித்திரைக்கு போவதற்குள் அதற்க்கு ஞான குரு விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் "தம்பி அந்த கட்டுமான கம்பனி தனது கப்பலை சரியாக கரையில் நிறுத்தி வைக்கவில்லை.ஆதாலால் அதை ஸ்டியரிங் போட்டு திருப்பையில் பிரச்சனை இது தான் Shipping turn over problem" என்றார்

அந்த மாபெரும் ஆராய்ச்சி கூடம் இவரின் அறிவை பயன்படுத்திக்கொள தவறவிட்டதற்கு இன்னொரு உதாரணம்.நாம் பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியலில் Scanning electron microscope (SEM) என்று ஒன்றை படித்திருப்போம். சின்னது எதுவோ அதை பெருசாக பார்க்கலாம் என்ற ரத்தின சுருக்கமாக அதற்க்கு ஞான குரு முதலில் விளக்கமளித்தார் .


ஆனால் அது அவ்வளவு எளிதில்லை என்பதற்கு ஒரு கதை சொன்னார்.நாம் படிக்கவேண்டிய ஒரு பெரிய விஷயத்திற்கான சாம்பிளாக அதில் இருந்து சின்னதாக பெயர்த்தெடுத்து கொடுத்தால் தான் அதை அந்த கண்ணாடி வழியாக பார்த்து ஆராய முடியும் என்று யாரோ சொல்லிவிட்டார்களாம்.சரி என்று கான்கிரீட் கட்டிடங்களை ஆராயும் இவர் அதிலிருந்துஒரு செங்கலை பெயர்த்தெடுத்து கொண்டுபோய் கொடுத்தார்.அரண்டு போன ஆராய்ச்சியாளர்கள் ஒருவாரம் விடுமுறை எடுத்து வேப்பிலை அடித்துக்கொண்டதாக தகவல்.


இன்றளவிலும் யாருமே இல்லாத தெருவிற்குள் இன்டிகேடர் போட்டு செல்லும் ஒரு சிடிசன் இவர்.தூங்கும்போது மட்டுமே ஹெல்மெட்டை கழட்டுவார் என்பது தனி சிறப்பு.

மதிப்பெண் வழங்குவதில் மட்டும் ஏனோ ஏக கறாராக இருப்பார் .இவர் சாப்பிடும் எக்ஸ்ட்ரா இட்லியை கண்டுக்கொள்ளாத மெஸ் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு கூட கம்மியான மதிப்பெண்களே அளித்து வருபவர் .திருப்பூரிலிருந்து பனியன் , திருநெல்வேலியில் இருந்து அல்வா மற்றும் சிறப்பு ஜெயின்சன் வேட்டிகள் அளிப்பவருக்கு மட்டும் போனால் போகிறது என்று முன்னுரிமை கொடுத்து நேர்மைக்கு இலக்கனாமாக திகழ்பவர்.

ஞான குருவுக்கென்று ஒரு சிறப்பான சீடன் உண்டு அந்த சீடனின் வீட்டுக்கே சென்று பங்குசந்தையை பற்றி தனது விரிவான அறிவை பகிர்ந்திருக்கிறார்.எப்படிப்போட்டால் காசை லாவகமாக இழக்கலாம் என்று இவர் சொல்லியிருக்கும் விஷயங்களை புத்தகமாக கொண்டுவரும் முயற்ச்சி நின்றுபோய் இன்று தஞ்சாவூர் கல்வெட்டுகளில் இவரது சாகசங்கள் பதியப்பட்டு வருகின்றன.

ஆங்கில புலமையை பற்றி அடிக்கடி பேசி நம்மை மூர்ச்சை அடைய வைப்பார்.வேலை கிடைக்காமல் போவதற்கே மாநாக்களிடம் இருக்கும் ஆங்கில அறிவின் போதாமை தான் காரணம் என்றார் .நீங்கள் வேலைக்கு சேரும் கம்பெனியில் என்ன எதிர்பார்ப்பீர்கள் என்று ஒரு நாள் வினவினார் ,சீடன் எழும்பி "Package" என்றான்.இப்படி சிறிய வயதிலேயே packaging கம்பனிக்கு போவேன் என்று நீ அடம்பிடிப்பது நல்லதில்லை என்றார்,குருவே என்று பொற்பாதங்கள் தொட்டு வணங்கினான் சீடன்.

இதுபோக இவரது ஆராய்ச்சி கூடத்தில் இதுகாலம் வரை இவரை பார்த்தவர்கள் அனைவரும் இவர் அனந்தசயனத்தில் இருக்கும்போதே பார்த்திருக்கின்றனர்.இவர் கண்விழிக்கும் நேரமெல்லாம் தேனீர் இடைவேளையாக இருப்பது விஞ்ஞானத்தால் விளக்க இயலாத ஆச்சரியம்

இதுபோல் குருவின் இன்னும் சில சாகசங்களை தொகுக்க அவரது சீடர்களிடம் உதவி நாடியுள்ளேன்.வந்ததும் தொகுக்கிறேன்.படிச்சிட்டு சாவுங்க

Thursday, February 11, 2010

நித்தம் பிறக்கும் ஓர் பாடல் - கைலாஷ் கெரின் தேரி தீவாணி

இந்த பாடலை முதல் முறை எப்பொழுது கேட்டேன் என்று நினைவில்லை. ஆனால் கேட்ட முதல் முறையே நிரம்பு மண்டலத்தின் உள் சென்று என்னை தூக்கியடித்த பாடல் இது. இதை கேட்காதவர்கள் ஒருமுறை கேட்டு விடவும்.




பாகிஸ்தானிய இசையை பற்றியும் அதன் பிறகு நான் தொடர்ந்து கேட்டுவரும் சூபி / கவ்வாலி வகை இசையை பற்றியும் தனி பதிவெழுத ஆசை. அதற்குமுன் நான் இந்த பாடலை பற்றி ஒரு சிறு குறிப்பாவது எழுத வேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

இந்திய இசையை தொடர்ந்து பின் தொடர்பவர்கள் கண்டிப்பாக கைலாஷ் கெரைஅறிந்திருப்பார்கள்.பதபடுத்தபட்ட இனிமையான குரல்களுக்கிடையில் நாட்டுப்புற இசையின் அடையாளமான கம்பீரமான குரலை இந்திய சினிமா இசைக்கு இன்று அளித்துக்கொண்டிருப்பவர் கைலாஷ். அவரது தந்தை ஒரு நாட்டுப்புற இசை கலைஞர் , பல்வேறு தடைகளையும் வறுமையும் தாண்டி மிகவும் சிரமபட்டே கைலாஷ் சினிமாவிற்குள் நுழைந்தார்.


அல்லா கே பந்தே பாடல் வந்தது தான் தாமதம் மொத்த இந்தி திரையிசை உலகமும் திரும்பி பார்த்தது.எப்படி கீழிருந்து மேல் வரை இவ்வளவு ஆளுமையுடன் ஒரு குரல் ஒலிக்கிறது என்ற ஆச்சரியம் அன்று அனைவருக்குமே இருந்தது. பல்வேறுதரப்பிலிருந்து கைலாஷுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே வந்தன. இன்றளவிலும் மண்ணின் இசையை அவர் பிரதிபலிப்பதாக ரஹ்மானிலிருந்து ஆமீர் கான் வரை பாராட்டி வருகின்றனர்.இசைக்கடவுளான நுஸ்ரத் பத்தே அலி கானை தனது மானசீக குருவாக கருதும் கைலாஷ் இந்திய பாப் சூபி இசை வடிவத்தில் கொடுத்துள்ள பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை

ஆனால் கைலாஷின் குரலில் வீரியமும் வீச்சும் உலகிற்கு உணர்த்திய பாடல் தேரி தீவாணி தான் என்பேன்.சூபி இசையை அடித்தளமாக கொண்டு பாப் இசையின் வடிவம் போல் இந்த பாடல் இருக்கும். பாடல் அளிக்கும் பரவசம் வார்த்தையில் இல்லாமல் இருக்கும் என்பதால் பாடலை ஒருமுறை கேட்பதே உசித்தம் .

இவ்வளவுக்கு பிறகே நான் பதிவின் மையத்திற்கு வருகிறேன். வெகு நாட்களாக எனக்கிருக்கும் கோபம் தமிழில் வரும் குரல் தேர்வுக்கான போட்டிகளில் யாரும் தயார் நிலையில் இருக்கும் பாடகர் இல்லை என்பது தான்.இதை பற்றிய விவாதம் கண்டிப்பாக தனிப்பதிவாக இடுவேன்.இங்கே இதை குறிப்பிடுவது ஹிந்தியில் வந்த ரியாலிட்டி ஷோக்களில் இந்த பாடல் எத்தகைய பரிமாணங்களை எல்லாம் அடைந்திருக்கிறது என்பதை சுட்டி காட்ட தான்.

முதலில் தோஷி பாடியது ( தோஷியின் அபார உழைப்பை பற்றியே அதிகம் சொல்லலாம் ) . இந்த பாடலை மட்டும் எடுத்து கொள்ளலாம் வாய்ஸ் ஆப் இந்தியாவில் தோஷி மிக முக்கியமான போட்டியாளர்.தோஷி தனது விளையாட்டை 2.16 இலே ஆரம்பித்து விடுகிறார் தாள கட்டுகளுக்கு அடங்காமல் அனாயசமாக தனது கட்டுபாட்டில் பாடலை வளைப்பது இவரின் சிறப்பு. 3.21 இல் இருந்து இவர் சரணத்தில் செய்யும் அட்டகாசம் பார்ப்பவர் அனைவரயும் வியப்பில் ஆழ்த்தியது , விளைவு ஜக்ஜீத் சிங் (பிரபல கசல் பாடகர்) ஒரே வரியில் சொன்னார் "நீ ஒரிஜினல் பாடலை காட்டிலும் நன்றாக பாடினாய் ".

பலமுறை போட்டியில் வரிகளை மறந்து சொதப்பிக்கொண்டிருப்பதே அந்த சிறுவனுக்கு வாடிக்கையாக இருந்தது.நல்ல இசையறிவு இருந்தும் இப்படி சொதப்புகிரானே என்று சுரேஷ் வாடேகரும் சோனு நிகாமும் வெளிப்படையாகவே சொன்னார்கள்.அதற்க்கு அமீர் ஹபீஸ் என்ற அந்த சிறுவன் அளித்த பதில் தேரி தீவாணி ! பெரியவர்களே தயங்கி தயங்கி பாடும் கீழ் நோட்சை பயமறியா இந்த சிறுவன் சுளுவாக பாடி அசத்தினான்.3.37 இல் சோனுவின் முகபாவனையே இவனின் திறனை உணர்த்தும் .

அந்தக்குரலை கேட்ட எல்லாருரிடத்திலும் நிம்மதி சந்தோசம் பொறாமை வியப்பு பிரமிப்பு, அண்ணாந்து தான் பார்த்தார்கள் , குரலுக்கு சொந்தக்காரர் ராஜா ஹாசன். சுக்விந்தர் சிங்கின் குரலுக்கு சரியான மாற்றாக ராஜா வருவார் என்று சொல்லலாம்.உச்ச ஸ்தாயியில் இவர் தய்யா தய்யாவை பாடிய பொழுது மொத்த அரங்கமும் அசந்துப்போனது.இந்த பாடலில் பெரிய அளவு மாறுதல்களை காட்டவில்லை என்றாலும் ( சரனத்தில் ஒரு சிறிய ஹர்கத்தை தவிர ) ராஜாவின் குரலில் இந்த பாடல் மிக புதுமையாக ஒலித்தது.

எல்லவாற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தால் போல் இருந்தது சமீபத்தில் ஷதாப் பாடியது. இந்த பாடலக்கு வேறு வடிவமே ஷதாப் கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. இப்பாடலில் இடங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட பொழுது பாடியது.ஒரு நிலையில் கமகங்களை அவர் பாடும்பொழுது மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டும்.மொழி புரிய வேண்டாம் உள்ளிருக்கும் நுட்பமான இசை சார்ந்த விஷயங்களும் தேவையில்லை பாடலுக்கு ஒரு உயிர் இருக்க வேண்டும் அது நமது மனங்களை தொட வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தும் பாடல் இது.


பி.கு : ஷதாபே இதை கவ்வாலியாகவும் உருமாற்றி பாடியுள்ளார். அதை காண





Wednesday, February 10, 2010

இலங்கையில் சீனாவின் தவறான ஆளுமை


டெலிக்ராபில் வந்த பீட்டர் போஸ்டரின் இந்த கட்டுரையின் தமிழாக்கம்

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை தனது சகிப்புதனமில்லாத போக்கை காட்டியிருக்கிறது , சரத் பொன்சேகாவின் கைது மூலம். பொன்சேகா தனது ராணுவ ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு தற்பொழுது நடந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவிற்கு எதிராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது நண்பர் டீன் நில்சன் பொன்சேகாவின் கைதை ஒட்டி நடந்த சம்பவங்களை இங்கே தொகுத்துள்ளார்.பொன்சேகாவை ராணுவ வீரர்கள் விசாரணைக்கு விடாப்பிடியாக இழுத்து சென்றிருக்கின்றனர்.

சமீபத்தில் இலங்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது.கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை ராஜபக்ஷே ஆட்சியின் கீழ் சர்வாதிகார நாடாக உருமாறி வருவதற்கு இது ஒரு உதாரணம்

அரசாங்கத்துக்கு எதிரான குரல்கள் சமீபகாலமாக அதிகம் ஒடுக்கபட்டு வருகின்றன.இலங்கை, பத்திரிக்கையாளர்கள் இயங்குவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக மாறி வருகின்றது.இதற்க்கு பிரபல பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமது ங்கேவின் மரண சாசனமே எடுத்துக்காட்டாகும். அதை படிக்காதவர்கள் உடனடியாக இங்கே படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சரி இது எல்லாவற்றிற்கும் சீனாவிற்கும் என்ன சம்பந்தம்? சீனாவின் மக்கள் ஜனநாயக சர்வாதிகார (!!) அரசு புதிதாக முளைத்திருக்கும் இலங்கையின் "மக்கள் சர்வாதிகார " அரசிற்கு பொருளாதார ரீதியில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இது உலகளாவிய ரீதியில் சீனாவின் மோசமான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது .

பூகோள ரீதியில் இலங்கை விடயம் சிறியது தான் , ஆனால் கிழக்காசியாவில் ஜனநாயக நாடாக இருந்து வந்த இலங்கை இப்பொழுது ஊழல் நிறைந்த எதேச்சிகார சர்வாதிகார நாடாக மாறி வருவது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விடயமாகும் .

பல காலமாக இலங்கையின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாமல் தான் இருந்து வந்தது ( மிக கவனமாக இந்தியாவை சங்கடப்படுத்தாமல் ) ஆனால் 2007 ஆம் ஆண்டு ராஜபக்ஷேவின் பீஜிங் பயணத்தில் இருந்து இது மாறத்தொடங்கியது . அவரின் வருகை பொருளாதார மற்றும் சில ராணுவ ரீதியான உதவியை இலங்கைக்கு சீனா அளிப்பதற்கு வழிவகுத்தது.

இந்த வருகைக்கு பிறகு இரண்டு அரசாங்கங்களும் " தீவிரவாதம் , பிரிவினைவாதம் , பயங்கரவாதம்" ஆகிய மூன்று அழிவு சக்திகளுக்கு எதிராக போராட ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. இத்தகைய வார்த்தை பிரயோகங்களின் மூலமே ராஜபக்ஷே சமீபத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.

சீனாவின் அரசிற்கு சொந்தமான China Harbour Engineering Company (CHEC) என்னும் கட்டுமான பெருநிறுவனம் ஒன்று தற்ச்சமயம் இலங்கையின் தெற்கு மூலையில் உள்ள ஹம்பண்டோடாவில் புது துறைமுகம் , விமான நிலையம் மற்றும் கொழும்புவுடன் இணைக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் பாதையையும் கட்டி வருகிறது.

சில ஆப்ரிக்க நாடுகளுடன் செய்வது போல் நேரடியாக ஈடுபடாமல் ஆளுங்கட்சியின் கையை பலப்படுத்துவது மூலம் இதை சீனா செய்துவருகிறது. இங்கே நாம் ஹம்பண்டோட்டா ராஜபக்ஷவின் சொந்த தொகுதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான கண்டனகள் , இலங்கையின் மீது அழுத்தம் கொடுக்காமல் இருக்க சீனாவின் பணமும் மனிதமற்ற தன்மையும் காரணிகளாக இருக்கின்றன.

இலங்கயின் சமீப போர் குற்றங்களை விசாரிக்க நடந்த ஐநா சபை விவாதத்தில் இலங்கயின் புதிய நண்பரான ரஷ்யா இலங்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.இப்பொழுது இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கு ஆயுதம் கொடுப்பது பற்றியான பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது . சீனாவின் கூட்டாளியான ஈரானும் மலிவு விலைக்கு எண்ணெய் மற்றும் சில பொருளாதார உதவிகளைத்தர முன்வந்திருக்கிறது .

பிரிட்டின் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்தும் பொருளாதார உதவிகளை ரத்து செய்தும் வருகிறது ஆனால் அந்த பணம் சொற்பம் என்பதால் இலங்கை உதறித்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.அமெரிக்கா அடிக்கடி நிலைமை மோசம் என்று மட்டும் கூறிக்கொண்டே இருக்கிறதே ஒழிய அதன் பங்கிற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை.

இந்த வெள்ளியன்று ஐரோப்பிய கூட்டமைப்பு இலங்கையுடனான வர்த்தகத்திற்கு இலங்கயின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி ரத்து செய்துள்ளது.ஆனால் இதை நடைமுறைபடுத்தும் தாமத்தை சீனாவின் பொருளுதவி ஈடுகட்டிவிடும் போல் தெரிகிறது.

சீனாவை பற்றி இந்த மாத இறுதியில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு , சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மா சாவோக்சு இலங்கை தனது சமூக ஸ்திரத்தன்மையை பேண வேண்டும் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.இப்படி தான் வெள்ளை வேன்களுடன் கொடுமை புரிந்த ராஜபக்ஷே அரசிற்கு ஆதரவாக சீனா சப்பை கட்டு கட்டுகிறது



இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த இந்த உலகம் விழித்துக்கொண்டால் தான் முடியும் , ஆனால் அது நடக்கும் என்பது சந்தேகமே