Wednesday, July 22, 2009
ஆத்மாநாம் என் ஆத்மாநாம்- அடுத்த ஐந்து
வாழ்க்கை
ஒரு நாள் இரண்டு நாள் என
தொடர்ந்து நாட்களை எண்ணினேன்
காலையை தொடர்ந்து மாலை
இரவாகும் காலப் புணர்ச்சியில்
பிரமித்து நின்றேன்
கடற்கரையில்
2.அற்புதமாய் புலர்ந்த காலை
நீள நிழல்கள்
நீலத்தில் கோலமிட
வண்ணக்கலவயாய் உலகம்
எங்கும் விரிந்து கெட்டியாய் தரை
என் காலடியில்
நிஜம் புதைந்து கிடக்க
3. தும்பி
எனது ஹெலிகாப்ட்டரை
பறக்க விட்டேன்
எங்கும் தும்பிகள்
எனது தும்பிகளை
பறக்க விட்டேன்
எங்கும் வெடிகுண்டு விமானங்கள்
எனது வெடிகுண்டு விமானங்களை
பறக்க விட்டேன்
எங்கும் அமைதி
எனது அமைதியை
பறக்க விட்டேன்
எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்
4. களைதல்
என்னை களைந்தேன்
என் உடல் இருந்தது
என் உடலை களைந்தேன்
நான் இருந்தது
நானை களைந்தேன்
வெற்றிடத்துச்
சூனிய வெளி இருந்தது
சூனிய வெளியை களைந்தேன்
ஒன்றுமே இல்லை
5.இசை/ஓசை
வயலினில்
ஒரு நாணாய்
என்னை போடுங்கள்
அப்பொழுதேனும்
ஒலிக்கிறேனா
எனப்பார்ப்போம்
அவ்வளவு துல்லியமாக
அவ்வளவு மெல்லியதாக
அவ்வளவு கூர்மையாக
எல்லா நாண்களுடனும்
ஒன்று சேர்ந்து
ஒலித்தப்படி
உள் ஆழத்தில்
ஒலியின்
ஆளரவமற்ற
இடத்தில்
மிக மிக மெலிதாய்
ஒரு எதிரொலி கேட்கிறது
கூர்ந்து கேட்டால்
அதே துல்லியம்
அதே மென்மை
அதே கூர்மை
Friday, July 10, 2009
ஆத்மாநாம் கவிதைகள்
இவரை பற்றி எங்கயாது போய் தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு ஒன்றுமே தெரியாது , இவரின் கவிதையும் இவரையும் தவிர! எனக்கு பிடித்த பத்து இதோ
சும்மாவுக்காக ஒரு கவிதை
உங்கள் நண்பரை சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்
சில எதிர்கால நிஜங்கள்
அரிசி மூட்டையிலிருந்து சிதறிய
அரிசி மணிகள் போல்
தப்பி தவறி திசை தடுமாறி ஓடி வந்த
சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்
மொசைக் தரையில் தவறிப்போன
ஒற்றை குண்டூசி போல்
இவற்றைப் போல் இன்னும்
ஆயிரக்கணக்கான போல்கள்
பழக்கம்
எனக்கு கிடைத்த சதுரத்தில்
நடை பழகிக்கொண்டிருக்கிறேன்
கால்கள் வலுவேறின
நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று
என் நடப்பைத்
தெரிந்துகொண்ட சில மாக்கள்
விளம்பினர்
ரோட்டிலேயே நடக்க முடியவில்லை
ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம்
நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா
என் கால்கள்
என் நடை
என் சதுரம்
ஐயோ
சொன்னால் மறுக்கிறார்கள்
எழுதினால் நிராகிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்
சுற்றி
அரச மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
வேப்ப மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
எந்த மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை இவன்
ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ?
மீதி ஐந்து அப்பாலிக்கா